சீர்காழி அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி
சீர்காழி:
சீர்காழி தேரு வடக்கு தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் மகன் ஆகாஷ் (வயது 17). இவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
நவராத்திரி விழா விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த ஆகாஷ் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் சீர்காழி புறவழிச்சாலையில் சென்றார். அவர் பனமங்கலம் என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மாணவர் ஆகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான ஆகாசின் தந்தை சீர்காழி கடைவீதியில் வெற்றிலை பாக்கு கடை நடத்தி வருகிறார். விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.