தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்ம மரணம்
தேவகோட்டை:
தேவகோட்டை புதுத் தெருவைச் சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மகன் சாகுல் அமீது (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது.
நேற்று ஆட்டோ ஓட்டிச் சென்ற சாகுல் அமீது, மாலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள விரிசல் ஆற்றுப் பாலத்தின் இறக்கத்தில் அவரது ஆட்டோ நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தேவகோட்டை நகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது ஆட்டோவும், அதன் அருகே சாகுல் அமீது உடலும் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சாகுல் அமீது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. எனவே அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவரை யாரேனும் தாக்கி கொலை செய்தார்களா? அல்லது குடி போதையில் சாகுல் அமீது ஆட்டோவை ஓட்டியதில் விபத்து ஏற்பட்டு பலியானாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.