செய்திகள்

சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

Published On 2017-09-20 16:32 GMT   |   Update On 2017-09-20 16:32 GMT
சிவகங்கை நகராட்சி மற்றும் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை:

சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதை பார்த்த அவர், அவற்றை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை பஸ் நிலையத்தில் பார்வையிட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். பின்னர் கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவும், கடைகளில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்தார்.

மேலும் முத்துப்பட்டியில் ரூ.31¼ கோடி மறுத்திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி உரக்கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது வீடுகளில் உள்ள குப்பைகளை வாங்கும்போதே மக்கும் குப்பை எனவும், மக்காத குப்பை எனவும் பிரித்து வாங்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் நீர்நிலைகளில் மீன் குஞ்சுகளை வளர்த்து உபரி வருமானம் கிடைப்பதற்கு வழி வகுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த ஆய்வின் போது, சிவகங்கை நகராட்சி ஆணையாளர் அய்யனார், பொதுப்பணி மேற்பார்வையாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் முத்தையா, நாட்டரசன்கோட்டை செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News