செய்திகள்

கடலூர்: மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததால் போலீசார் முன்பு கழுத்தை அறுத்த தொழிலாளி

Published On 2017-09-19 17:49 IST   |   Update On 2017-09-19 17:49:00 IST
வாகன சோதனையின் போது போலீசாரின் கண்முன்பு தொழிலாளி பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

சென்னை ஆட்டுத்தொட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 21). இவர் கடலூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

கார்த்திகேயனும், கடலூரை அடுத்த பில்லாளிதொட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் இளையராஜா (23) என்பவரும் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்றனர். அங்கு இருவரும் மது குடித்து விட்டு இரவில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை இளையராஜா ஓட்டி வந்தார்.

கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

கார்த்திகேயன், இளையராஜா ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர்.

மோட்டார் சைக்கிளை திருப்பி தரும்படி இளைய ராஜாவும், கார்த்திகேயனும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை கொடுக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், போலீசார் கொடுக்க மறுத்தனர்.

அப்போது கார்த்திகேயன் கோபம் அடைந்து திடீரென்று தன்னிடம் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்தார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News