செய்திகள்

கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2017-08-30 21:01 IST   |   Update On 2017-08-30 21:01:00 IST
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் வறட்சியின் காரணமாக அதால பாதாளத்துக்கு சென்றது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, கோத்திகிரி, அப்பர் பவானி, கொடநாடு மற்றும் கூடலூர் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இந்த மழை பெய்து வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மழைக்கேற்ப அதிகரித்தது. வறட்சியின்போது 37 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 50 அடியை தொட்டு 57 அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் 15 அடி சேறும் சகதியும் கொண்டது. 105 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று முன்தினம் மழை குறைந்து அணைக்கு வினாடிக்கு 647 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று மதியத்துக்கு நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, கொடநாடு, கூடலூர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இந்த மழை எதிரொலியால் நேற்று மதியம் அணைக்கு வினாடிக்கு 1526 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை அது மேலும் அதிகரித்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

நேற்று மதியம் 57.24 அடியாக இருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 58.58 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்னும் ஓரிரு நாளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு மேலும் அதிகளவில் தண்ணீர் வந்து நீர்மட்டமும் உயரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் ஈரோடு மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Similar News