செய்திகள்

உடுமலை அருகே கார் - மோட்டார்சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி

Published On 2017-08-30 13:24 GMT   |   Update On 2017-08-30 13:24 GMT
உடுமலை அருகே கார்–மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். உடன் சென்ற நண்பர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
குடிமங்கலம்:

உடுமலை அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் அம்மாசை, கூலித்தொழிலாளி. இவரது மகன் முரளி (வயது 18). இவர் உடுமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் கணேசன் (19).

இந்த நிலையில் கணேசனின் தந்தைக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருந்து வாங்கி வருவதற்காக முரளியும், கணேசனும் ஒரு மோட்டார்சைக்கிளில் பெதப்பம்பட்டிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அங்கு மருந்து வாங்கிக்கொண்டு மீண்டும் புதுப்பாளையத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

இதற்கிடையில் பொள்ளாச்சியில் இருந்து பெதப்பம்பட்டிக்கு ஒரு பஸ் வந்துகொண்டிருந்தது. அந்த பஸ் ராவணாபுரத்தில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் புறப்பட தயாரானது. மோட்டார்சைக்கிளில் வந்த முரளியும், கணேசனும் அந்த பஸ்சை முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே பொள்ளாச்சி நோக்கி வந்த ஒரு கார் இவர்களது மோட்டார்சைக்கிள் மற்றும் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த முரளி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடன் வந்த கணேசன் படுகாயம் அடைந்தார். அதுபோல் காரில் வந்த முகமது (30) என்பவரும் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர் முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News