காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
ஈரோடு, ஆக. 14-
சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு, அரிஜன காலனியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நந்தினி (வயது19).
சசிகுமாரும், நந்தினியும் காதலித்து 5 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நந்தினிக்கு வயிற்று வலி இருந்ததாகவும், இதனால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று நந்தினி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை தாழ்போட்டு கொண்டு தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினியின் மாமியார் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 5 மாதமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் விசாரணை நடத்தி வருகிறார்.