செய்திகள்

சிதம்பரம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.3½ லட்சம் கொள்ளை

Published On 2017-08-10 17:47 IST   |   Update On 2017-08-10 17:48:00 IST
டாஸ்மாக் ஊழியரிடம் மர்ம மனிதர்கள் ரூ.3½ லட்சத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள சின்னாண்டிகுழியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் புதுசத்திரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வசூலான பணம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர். புதுசத்திரம் ரெயில்வே கேட் பகுதியை கடப்பதற்காக மோட்டார் சைக்கிளை கருணாநிதி மெதுவாக இயக்கினார்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்ம மனிதர்கள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை கருணாநிதியின் மோட்டார் சைக்கிள் மீது மோத விட்டனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கருணாநிதி காயம் அடைந்தார். இதை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் கருணாநிதி வைத்திருந்த ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

காயமடைந்த கருணாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புதுசத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News