செய்திகள்

மயிலாடுதுறையில் பேக்கரி கடையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம்

Published On 2017-08-05 14:22 GMT   |   Update On 2017-08-05 14:22 GMT
மயிலாடுதுறையில் பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 மாடி கட்டிடம் முழுவதும் எரிந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

மயிலாடுதுறை:

சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பேக்கரி மற்றும் இனிப்பகம் கடை நடத்தி வருகிறார். தரை தளத்தில் விற்பனைக்கூடம், முதல்தளம் மற்றும் 2வது தளத்தில் இனிப்புகள் உற்பத்தி கூடம் செயல்படுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மின்கசிவின் காரணமாக நேற்று இரவு 10.30 மணிக்கு இனிப்புகள் உற்பத்தி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் எரிந்தது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில், நிலைய அலுவலர் போக்குவரத்து தனசேகர் மற்றும் குத்தாலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வீரராகவன் தலைமையிலும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவரமுடியாததால் அப்பகுதியல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இனிப்பு தயாரிக்கும் எந்திரங்கள், இனிப்புகள் மற்றும் பொருட்கள் முற்றிலும் தீக்கிரையானது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News