வேதாரண்யத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலி: முதியவர் படுகாயம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் மணிமாறன் (வயது 25). இவர் சம்பவதன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேதாரண்யம் வடக்கு வீதி அருகே சென்ற போது அந்த வழியாக நடந்து சென்ற தோப்புதுறை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன் (59) என்பவர் மீது மோதினார்.
இதில் 2 பேரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மணிமாறன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விசித்திராமேரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அன்புராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.