செய்திகள்

பாதிரிக்குப்பத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

Published On 2017-07-29 22:21 IST   |   Update On 2017-07-29 22:21:00 IST
நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி பாதிரிக்குப்பத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பேருதவியாக இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு சரியாக வேலை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரிக்குப்பத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 1,500 பேர் உள்ளனர். ஆனால் அங்கு சுழற்சி அடிப்படையில் வேலை வழங்கப்படுவதால் வாரத்துக்கு சுமார் 150 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதோடு கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியமும் வழங்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று பாதிரிகுப்பத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான முறையில் வேலை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்களின் போராட்டம் நடந்தது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குர்ஷிதாபேகம், சாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Similar News