செய்திகள்

விருத்தாசலத்தில் ஆசிரியை வீட்டில் ரூ. 2 லட்சம் நகை- பணம் கொள்ளை

Published On 2017-07-23 16:30 GMT   |   Update On 2017-07-23 16:30 GMT
விருத்தாசலத்தில் நள்ளிரவில் கதவை உடைத்து ஆசிரியை வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஏ.வடக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ராஜா (வயது 40). இவர் விருத்தாசலம் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (35). இவர் தொட்டிக்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம மனிதன் அங்கு வந்தான். அவன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தான்.

கணவன்- மனைவி படுத்திருந்த அறைக் குள் சென்றான். அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்தான். பின்னர் தூங்கி கொண்டிருந்த ஆசிரியை அபிராமி கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையையும் பறித்தான். கண்விழித்த அபிராமி திருடன்... திருடன்... என அலறினார்.

இந்த சத்தம் கேட்டு எழுந்த செந்தில்ராஜா அந்த மர்ம மனிதனை பிடிக்க முயன்றார். ஆனால், அந்த மர்ம மனிதன் நகை, பணத்துடன் தப்பி ஓடிவிட்டான். கொள்ளையடிக்கப்பட்ட நகை- பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இதையடுத்து செந்தில்ராஜா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொள்ளையனை அங்குள்ள தெருக்களில் தேடினார்.

அந்த பகுதியில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த செந்தில்ராஜா மற்றும் பொதுமக்கள் அவரை பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் ஆசிரியை வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News