செய்திகள்

திருப்பத்தூர் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-ம் திருமணம் செய்தவர் கைது

Published On 2017-06-21 17:04 IST   |   Update On 2017-06-21 17:04:00 IST
கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சிதரவதை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் 2-ம் திருமணம் செய்ததால் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள என்.புதூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி பாண்டியன் (வயது 42) ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லீலாவதி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து லீலாவதி வசித்து வந்தார். இந்த நிலையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் லீலாவதி புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனக்கு திருமணத்தின் போது 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. சில ஆண்டுகளில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சிரஞ்சீவி பாண்டியன் சித்ரவதை செய்தார். இதனால் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்தேன்.

இந்த சூழலில் கணவர் சிரஞ்சீவி பாண்டியன், பாண்டிச்செல்வி என்பவரை எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி சிரஞ்சீவி பாண்டியன், அவரது சகோதரிகள் மீனா, கருப்பாயி, தந்தை மணி, உறவினர் சுப்பிரமணியன், 2-வது மனைவி பாண்டிச் செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து சிரஞ்சீவி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

Similar News