செய்திகள்

மதுபோதையில் தாயை தாக்கியதால் தந்தையை அடித்து கொன்ற மகன்

Published On 2017-06-05 14:56 IST   |   Update On 2017-06-05 14:56:00 IST
காஞ்சிபுரம் அருகே மது போதையில் தாயை தாக்கியதால் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார்பாளையம், மாதனபாளையம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சந்தோஷ்குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

மதுபழக்கத்துக்கு அடிமையான கண்ணன் தினமும் மதுகுடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவும் அதேபோல் மது போதையில் வந்த கண்ணன் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அவரை மனைவி ஜெயா கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் மனைவியை தாக்கினார்.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் அருகில் கிடந்த கட்டையால் தந்தை கண்ணனை தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News