துபாய்-சிங்கப்பூரில் இருந்து சென்னை விமானத்தில் ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல்: 2 பேர் கைது
ஆலந்தூர்:
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கடலூரை சேர்ந்த ராஜசேகரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்த போது சிறுசிறு துண்டுகளாக தங்க கம்பிகளை ஆசன வாயில் பகுதியில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும். ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சிவக்குமாரை சோதனை செய்ய போது உள்ளாடையில் மறைத்து 4 தங்க கட்டிகள் கடத்தி வந்தது தெரிந்தது.
அதனை பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனர். தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.10½ லட்சம் ஆகும்.