செய்திகள்

ஈரோட்டில் வாயில் கருப்பு துணி கட்டி அரசு டாக்டர்கள் போராட்டம்

Published On 2017-05-05 16:53 IST   |   Update On 2017-05-05 16:53:00 IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இட ஒதுக்கீடு கேட்டு டாக்டர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஈரோடு:

மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் கடந்த 19-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2 மணி நேர வேலை புறக்கணிப்பு, தர்ணா, ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இன்று 17-வது நாளாக டாக்டர்கள் போராட்டம் நீடிக்கிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர்கள் இன்று வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஏராளமான டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் புற நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

போராட்டம் பற்றி அரசு டாக்டர்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபிரபு கூறியதாவது:-

எங்களது போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும். எங்கள் கோரிக்கை தொடர்பான வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதனை பார்த்துவிட்டு அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்.

எங்களுக்கு சாதகமான முடிவு வராவிட்டால் நாளை சென்னையில் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக ஈரோட்டில் இருந்து 100 பேர் எனது தலைமையில் இன்று இரவு சென்னைக்கு செல்ல உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News