செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை ஓடும் பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்ட 4 பேர் கைது

Published On 2017-04-18 13:59 GMT   |   Update On 2017-04-18 14:00 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குமார் தொழிலாளி. இவரது மகள் கவுசல்யா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த குருநாதன் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகிவந்தனர்.

இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த குருநாதனின் அக்கா உஷா, மாமா பாஷா ஆகிய இருவரும் காதலர்களை திருப்பூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்து வைத்தனர்.

இந்த தகவல் குருநாதனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் திருப்பூருக்கு சென்று காதல் தம்பதிகளான குருநாதன், கவுசல்யா ஆகியோரிடம் நைசாக பேசி ஊருக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவர்களுடன் குருநாதனின் உறவினர்களும் அதே பஸ்சில் வந்தனர்.

திருப்பூரிலிருந்து அங்கு செட்டிப்பாளையத்துக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்குசெட்டிப் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்துகொண்டிருந்தபோது பஸ்சின் படிகட்டிலிருந்து கவுசல்யாவை குருநாதனின் தந்தை ஆறுமுகம் உள்பட 4 பேர் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவுசல்யா பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் இன்ஸ் பெக்டர் தாமரைச்செல்வி, கவுசல்யாவின் கணவர் குருநாதன், குருநாதனின் தந்தை ஆறுமுகம், அக்கா உஷா, மாமா பாஷா மற்றும் உறவினர்கள் வள்ளி, தெய்வானை, தெய்வா ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கணவர் குருநாதன், மாமனார் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் வள்ளி, தெய்வானை ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News