செய்திகள்

கவர்னர் உத்தரவுகளை தெரிவிக்க தலைமை செயலாளருக்கு முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தல்

Published On 2017-04-12 07:17 GMT   |   Update On 2017-04-12 07:17 GMT
கவர்னர் கிரண்பேடியின் உத்தரவுகளை உடனுக்குடன் எனக்கும், துறை அமைச்சர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஆட்சியாளர்களின் உத்தரவுகளை தலைமை செயலாளர் மனோஜ்பரிதா நிறைவேற்றி வருகிறார். தனது ஒப்புதல் பெறாமல் அதிகாரியை மாற்றியது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் தரும்படி கவர்னர் கிரண்பேடி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை தலைமை செயலாளர் கவர்னரை சந்தித்து விளக்கம் தரவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தனக்கு ஒத்துழைப்பு தராத அரசு செயலர்களின் பெயர்களை கவர்னர் இன்று வெளியிட்டார். அதில் தலைமை செயலாளர் மனோஜ்பரிதா, நிதித்துறை செயலர் கந்தவேலு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 28 வாரங்களாக தங்களின் பணி தொடர்பான எந்தவிதமான அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.



இதற்கிடையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், கவர்னரிடமிருந்து எந்தவித தகவல்களோ, உத்தரவுகளோ வந்தால் உடனுக்குடன் எனக்கும், துறை அமைச்சர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும் கவர்னர் உத்தரவுகளின் மீதான நடவடிக்கைக்கு முன்பு அதை தெரிவிக்க வேண்டும். இதை அனைத்து செயலாளர்களும், மற்ற துறை தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News