செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: வடகாட்டில் 21 நாட்களாக நடந்த போராட்டம் தற்காலிக வாபஸ்

Published On 2017-03-25 14:20 GMT   |   Update On 2017-03-25 14:20 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வடகாட்டில் கடந்த 21 நாட்களாக நடந்த போராட்டமானது, கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும் வடகாட்டிலும், நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தொடர்ந்து நீடித்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி வடகாட்டில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக அப்பகுதி மக்களும், சுற்று வட்டார கிராம மக்களும் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்ற இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை எனக்கூறி நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வடகாட்டை சேர்ந்த 5 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நீடித்தது.

இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மாட்டோம், வடகாடு, வாணக்கான்காடு, கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்றிவிடுவோம் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் எழுத்து பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், வடகாடு போராட்டக்குழுவினருடன் இன்று கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 21 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.

முன்னதாக கலெக்டர் உறுதியளித்ததையடுத்து, நல்லாண்டார் கொல்லையிலும் போராட்ட குழுவினர் போராட்டத்தைக் கைவிடுவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News