செய்திகள்

ஓடும் ரெயிலில் தொழில் அதிபரிடம் ரூ.57 ஆயிரம் திருட்டு

Published On 2017-03-20 12:29 GMT   |   Update On 2017-03-20 12:29 GMT
ஓடும் ரெயிலில் தொழில் அதிபரிடம் ரூ.57 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 67). தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்துகொண்டு இருந்தார். ரெயிலில் பாலகிருஷ்ணன் குளிர்சாதன (ஏ.சி.) பிரிவு பெட்டியில் பயணம் செய்தார்.

அந்த ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்தை தாண்டியதும் பாலகிருஷ்ணன் தான் கொண்டு வந்த பணப்பையை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினார். அந்த பையில் ரூ.57 ஆயிரம் இருந்தது.

இந்தநிலையில் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்தபோது பாலகிருஷ்ணன் கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு அருகில் இருந்த பணப்பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாலகிருஷ்ணன் தூங்கிக்கொண்டு இருந்தபோது பணப்பையை யாரோ மர்ம நபர் திருடிவிட்டது தெரியவந்தது.

நேற்று அதிகாலை பாலகிருஷ்ணன் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். உடனே ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று அவர் புகார் கொடுத்தார். திருட்டு நடந்த சம்பவம் காட்பாடி பகுதி என்பதால் ஈரோடு ரெயில்வே போலீசார் பாலகிருஷ்ணனின் புகாரை காட்பாடிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News