செய்திகள்

இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டம் செய்த 28 பேர் கைது

Published On 2017-02-27 07:00 IST   |   Update On 2017-02-27 07:00:00 IST
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 28 பேர் நாகையில் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என கூறி பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பின. இதையடுத்து மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த திட்டத்துக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 28 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்துக்காக போடப்பட்டிருந்த பந்தலையும் போலீசார் அகற்றினர்.

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி தண்ணீர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அந்த அமைப்பினர் 8 பேர் நேற்று திருச்சியில் இருந்து நெடுவாசல் நோக்கி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி விமான நிலையம் அருகே 8 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர். 

Similar News