செய்திகள்

களக்காடு அருகே பச்சையாற்று பாலத்தை வெடிவைத்து தகர்க்க சதித்திட்டம்: 2 பேர் கைது

Published On 2017-02-13 10:02 GMT   |   Update On 2017-02-13 10:02 GMT
களக்காடு அருகே உள்ள பச்சையாற்று பாலத்தை வெடிவைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 44). இவரது நண்பர் களக்காடு காந்திவீதியை சேர்ந்த ஜான் செப்ரோன் (36). இவர்கள் இருவரும் நேற்று மாலை களக்காட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்தனர்.

அப்போது அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினராம். தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாததால் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது. எனவே சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட நாம் அதிரடியாக செயல்பட வேண்டும் என அவர்கள் பேசிக்கொண்டனர். அதற்காக களக்காடு- சேரன்மகாதேவி சாலையில் உள்ள பச்சையாற்று பாலத்தை வெடி வைத்து தகர்த்தால் தமிழகமே குலுங்கும். அதன் பின்னர் தமிழகத்தில் நிலையான ஆட்சி வந்து விடும் என்றும் அவர்கள் திட்டமிட்டனராம்.

அதன் பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் ஊருக்குள் வந்த நண்பர்கள் இருவரும் தங்களது ‘அதிரடி’ திட்டம் குறித்து சிலரிடம் உளறினர். அவர்கள் இந்த தகவலை களக்காடு போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து இஸ்ரவேல், ஜான்செப்ரோன் ஆகிய இருவரையும் களக்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்பு அவர்கள் மீது 251, 701, 7(1)(ஏ) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News