செய்திகள்

ஐகோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அகற்றம்

Published On 2017-02-07 19:52 IST   |   Update On 2017-02-07 19:53:00 IST
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்படி புதுக் கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அகற்றப்பட்டன.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் பின்புறம் காந்தி பூங்கா உள்ளது. காந்தி பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காக அந்த கடைகளை இடித்து அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து கடைகளை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

இதற்கு அந்த பகுதியில் கடை வைத்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, காந்தி பூங்காவை விரிவாக்கம் செய்ய அங்குள்ள கடைகளை நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றலாம் எனவும், அங்குள்ளவர்களுக்கு வேறு இடத்தில் கடைகளை ஒதுக்கி தரலாம் என்றும் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்படி நேற்று புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை பொக்ளின் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி புதுக்கோட்டை டவுன் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News