செய்திகள்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளிடம் வழிப்பறி: 4 பேர் கைது

Published On 2017-01-26 08:35 GMT   |   Update On 2017-01-26 08:35 GMT
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் சுற்றுலா வரும் பயணிகளிடம் வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த செனிஜா முராரி கடந்த மாதம் 26-ந் தேதி மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.

வடக்கு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி சென்றபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து கைப்பையை பறித்து சென்றனர். செல்போன், வெளிநாட்டு பணம் இருந்தது.

இது குறித்து மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.

அப்போது வழிப்பறியில் ஈடுபட்டது மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த தீபக்குமார், அஜித்குமார், பிலிப்குமார், சிவக்குமார், விஜயகுமார் என்பது தெரிந்தது.

அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் தீபக்குமார் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். மற்ற 4 பேரும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

உல்லாச செலவுக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதேப்போல் அவர்கள் மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா வரும் ஏராளமானவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கைதான 5 பேரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News