செய்திகள்

தேசிய விருது: தந்தி டி.வி.-ராஜேஷ் லக்கானிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2017-01-26 08:11 GMT   |   Update On 2017-01-26 08:11 GMT
வாக்காளர்களுக்கு சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றுள்ள தந்தி டிவிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் இதழியல் துறையில் எளிய மக்களின் நண்பனாக விளங்குவது தினத்தந்தி நிறுவனம். பெருமைமிக்க அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சி ஊடகமான தந்தி டி.வி, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, குடியரசு தின விழாவில் விருது பெற்றுள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைநகர் புதுடெல்லியில் இந்த விருதினை மேதகு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கிட, தந்தி டி.வி குழும நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுக்கொண்டுள்ளார்.

சென்னை போன்ற இடங்களில், கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ள நிலையில், தந்தி டி.வியின் பணி இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது.

ஊடகத்துறையில் தந்தி குழுமம் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி, பல விருதுகளைப் பெறவும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட செய்திகளை தொடர்ந்து வெளியிடவும் வாழ்த்துகிறேன்.

தமிழக சட்டமன்ற தேர்தலை வன்முறையின்றி நடத்தியதற்காக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு மேதகு இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கியுள்ளார். ராஜேஷ் லக்கானிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்முறையற்ற தேர்தல் என்பது தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம். இனிவரும் காலங்களில் ஆளுங்கட்சியின் முறைகேடான தேர்தல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த இத்தகைய விருதுகள் ஊக்கம் தருவதாக அமையட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News