செய்திகள்

தனியார் பள்ளியில் மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை?: போலீசார் விசாரணை

Published On 2017-01-16 10:28 GMT   |   Update On 2017-01-16 10:29 GMT
தனியார் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் மாணிக்கவேல் (வயது 17). தஞ்சை மானம்பு சாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணிக்கவேல் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ் பெக்டர் சிட்டிபாபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலை முயற்சியில் குதித்து இறந்தாரா? தவறி விழுந்து இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News