செய்திகள்

கிறிஸ்தவ தேவாலய சீரமைப்பு நிதிஉதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

Published On 2017-01-02 15:37 IST   |   Update On 2017-01-02 15:37:00 IST
நாகை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலய சீரமைப்பு பணிக்கான நிதிஉதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் (2016-17) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும், தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை) அளிக்கவேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்

விண்ணப்ப படிவத்தை பிற்சேர்க்கை உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு 31.01.2017க்குள் வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News