செய்திகள்

வேதாரண்யம் அருகே மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்

Published On 2016-12-30 10:04 GMT   |   Update On 2016-12-30 10:04 GMT
வேதாரண்யம் அருகே மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். தஞ்சம் அடைந்த காதல்ஜோடி வேதாரண்யம் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாபட்டினம், தென்னம்புலம் கலை நகரை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சுகன்யா (வயது 20). இவர் பிளஸ்-1 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சுகன்யா மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னதுரை தனது மகள் மாயமானது பற்றி கரியாபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுகன்யா இன்று காலை கரியாபட்டினம் போலீசில் காதலனுடன் வந்து தஞ்சம் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கத்திரிபுலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பவரை காதலித்து வந்ததும், சம்பவத்தன்று காதலனுடன் சென்னை சென்று வடபழனியில் பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. தமிழ்செல்வன் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

தஞ்சம் அடைந்த காதல்ஜோடி வேதாரண்யம் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். காதல் ஜோடியிடம் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர விசாரணை நடத்தினர்.

காதல்ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் கரியாபட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News