பூம்புகார் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவி பலி: போலீசார் விசாரணை
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள மேலையூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் பெருந்தோட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சுருதி (வயது 15).
இவர் தரங்கம்பாடி அருகே உள்ள ஆணைக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை ரவிக்குமாரும், சுருதியும் மோட்டார் சைக்கிளில் விநாயகர் கோவிலுக்கு சென்றனர். அப்போது வெட்டப்பள்ளம் நாடார் தெருவைச்சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் சுருதி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மயிலாடுதுறை உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பூம்புகார் போலீசார் பலியான சுருதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.