10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்: செல்லாது என்ற வதந்தி
காஞ்சீபுரம்:
உயர் மதிப்பு உள்ள ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் முன்பு பொது மக்கள் காத்து கிடக்கிறார்கள்.
சில்லரை தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ. 10, ரூ, 20, ரூ. 50 நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன.
இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று காஞ்சீபுரத்தில் வதந்தி பரவியது. இதையடுத்து பொது மக்கள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுத்தனர்.
இதனால் சில்லரை தட்டுப்பாட்டால் தவித்த பொது மக்கள் மேலும் அவதி அடைந்து உள்ளனர். சில கடைகளில் வியாபாரிகளுடன் வாக்குவாதமும் ஏற்பட்டது.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, 10 ரூபாய் நாணயத்தினை கடைகளிலும், ஆட்டோ டிரைவர்களும், மார்க்கெட்டிலும் வாங்க மறுக்கின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது போல 10 ரூபாய் நாணயமும் செல்லாது என்ற வதந்தி பரவி உள்ளது. இதனால் கையில் வைத்துள்ள 10 ரூபாய் நாணயங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று வேதனையுடன் கூறினர்.
இதுபற்றி வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘10 ரூபாய் நாணயங்களில் போலி நாணயங்கள் உலவுவதாக தகவல் வந்தது. அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாததால் எதற்கு வம்பு என 10 ரூபாய் நாணயங்களை பெறுவதில்லை’ என்று தெரிவித்தார்.இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவி உள்ளது.