செய்திகள்

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட போராட்டம் நடத்தினால் ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2016-12-25 02:29 IST   |   Update On 2016-12-25 02:29:00 IST
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட போராட்டம் நடத்தினால் அதை ஏற்க முடியாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த நாட்டின் முன்னேற்றம் சீராக அமைய வேண்டும் என்று சொன்னால் தவறு செய்பவர்கள் எந்த உயர்நிலையில் இருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள் என்ற சூழ்நிலை வந்தாக வேண்டும்.

தற்போது நடக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைகள் மக்களால் வரவேற்கப்படுகின்றது. இதில் எந்த வகையிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

மதுரையில் ஜல்லிக்கட்டு அமைப்பு நிர்வாகிகளுடன் பேசிவிட்டு வந்து உள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்த எல்லா வகையிலும் முயற்சித்து வருகிறோம். எனக்கு நம்பிக்கை உள்ளது. புதிது புதிதாக போராட்டம் நடத்த பலர் வருகின்றனர். போராட வேண்டிய நிலைமையில் நான் இல்லை. ஜல்லிக்கட்டு நடத்த எல்லாவிதமான பணிகளையும் செய்வது தான் எனது கடமை.

போராட்டம் நடத்துபவர்கள் கடந்த 3 மாதங்களாக எங்கு சென்றார்கள்? என தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளனர்.

அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என ஆத்மார்த்தமாக சொன்னால் அது வரவேற்கப்பட வேண்டும். இந்த கட்சிக்குத்தான் பங்கு, அந்த கட்சிக்கு தான் பங்கு என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வரவேற்கிறோம். அரசியல் ஆதாயம் தேட யார் முயன்றாலும் அதை ஏற்க முடியாது.

இந்த பிரச்சினையில் எந்த கட்சியும் ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லை. இப்போது போராட்டம் என வருவதை ஏற்க முடியாது. நாங்கள் நம்பிக்கையுடன் முழு முயற்சிகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News