செய்திகள்
அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அந்தியூர் அடுத்த நெரிசிப் பேட்டை முத்துசாமி வீதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மனைவி சின்னம்மாள் (வயது 65). சம்பவத்தன்று சின்னம்மாள் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று கொண்டிருந்தார். பவானி- மேட்டூர் ரோட்டில் நடந்து வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்பாராதவிதமாக சின்னம்மாள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.