செய்திகள்

புதிய ரூபாய் நோட்டு விநியோகத்தில் குளறுபடி: தா.பாண்டியன் குற்றச்சாட்டு

Published On 2016-11-29 11:05 GMT   |   Update On 2016-11-29 11:05 GMT
புதிய ரூபாய் நோட்டு வினியோகம் செய்ததில் குளறுபடிகள் உள்ளன என தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

மோடி அரசு கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டிற்கு எதிரான புனித போர் எனக்கூறி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் இந்திய பொருளாதாரம் 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டது. 120 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மறந்து மக்களை பிரதமர் மோடி துன்புறுத்துகிறார்.

இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி போராடி வெற்றி பெற வேண்டும். புதிய ரூபாய் நோட்டு வினியோகம் செய்ததில் குளறுபடிகள் உள்ளன. இந்த திடீர் அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள், வர்த்தகர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தா.பாண்டியன் வந்து கோவில் இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு அதே இடத்தில் நிரந்தரமாக பட்டா வழங்கிடகோரி கோரிக்கை மனுவை கலெக்டர் பழனிசாமியிடம் வழங்கினார்.

Similar News