அறந்தாங்கி அருகே இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த கூத்தாடி வயலில் கடந்த 88-ஆம் ஆண்டு சோமசுந்தரதேவர் என்பவர் தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 56 பேருக்கு வீட்டு மனை பட்டாவை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கியது. அந்த இடத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு இறந்த அமிர்தத்தின் கணவர் அடைக்கலத்தை அடக்கம் செய்துள்ளனர்.
அதேபகுதியைச் சேர்ந்த அமிர்தம் என்பவர், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தனக்கு சொந்தமானது என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அமிர்தம் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அமிர்தத்தின் உறவினர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறும், ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமிர்தத்தின் கணவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் புதைப்பதற்காக புதைகுழி தோண்டி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தினர் அப்பகுதிக்கு வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடலை புதைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் பரணி, ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு, சப்இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடலை புதைக்கக்கூடாது எனக் கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தத்தின் உறவினர்கள் திடீரென்று கூத்தாடிவயல் செல்லும் சாலையில் அமிர்தத்தின் உடலை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இடம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளதால், பிரச்சினைக்குரிய இடத்தில் உடலை புதைக்க அனுமதி இல்லை. இப்பிரச்சினை தொடர்பாக ஐகோர்ட்டை அணுகி தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து அமிர்தத்தின் உறவினர்கள் உடலை எடுத்துச் சென்று, தங்களது வழக்கமான மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.