செய்திகள்

காரைக்குடியில் வங்கியில் காத்திருந்த மூதாட்டியிடம் பணம் திருட்டு

Published On 2016-11-18 15:35 IST   |   Update On 2016-11-18 15:36:00 IST
காரைக்குடியில் வங்கியில் காத்திருந்த மூதாட்டியிடம் பணம் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி:

காரைக்குடி மகர்நோன்பு பொட்டலை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி இந்திரா (வயது72). இவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கோவிலூர் ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கியில் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த கோட்டையூர் விநாயகர் அக்ரகாரத்தை சேர்ந்த சங்கர் (வயது42) என்பவர் இந்திராவிடம் வங்கி ஊழியர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு ரூ.5 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பினார்.

இது குறித்து போலீசில் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்திரா அதே வங்கியில் பணம் செலுத்த வந்தபோது அங்கிருந்த சங்கரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தார்.

இதேபோல் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த அனீஸ்பாத்திமா என்பவர் செக்காலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணம் செலுத்த காத்திருந்தபோது அங்கு வந்த 42 வயது மர்ம ஆசாமி ரூ.2 ஆயிரத்தை மாற்றி தருவதாக கூறி வாங்கி கொண்டு தப்பினார்.

இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News