செய்திகள்

கீரனூர் அருகே குரங்குகள் கடித்து 2 பெண்கள் காயம்

Published On 2016-11-17 14:16 GMT   |   Update On 2016-11-17 14:16 GMT
கீரனூர் அருகே குரங்குகள் கடித்து 2 பெண்கள் காயம் அடைந்தனர். அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரனூர்:

கீரனூர் அருகே குளத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கணபதிபிள்ளை, இவரது மனைவி சாந்தா (வயது 60).

சம்பவத்தன்று இவர் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 5க்கும் மேற்பட்ட குரங்குகள் அவரது வீட்டிற்குள் புகுந்தது. திடீரென குரங்குகள் அனைத்தும் அவரது மீது பாய்ந்து கடித்து, நகங்களால் பிரான்டியது. இதனால் கூச்சலிட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீரனூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் அதே பகுதியை சேர்ந்த அரசு பேருந்து டிரைவராக பணிபுரிபவர் காமாட்சி, இவரது மனைவி கிருஷ்ணவேனி (38). இவர் வீட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது, வீட்டிற்குள் புகுந்த குரங்கு அவரது கையை கடித்தது. இதனால் காயமடைந்த அவர் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குளத்தூர் பகுதியில் இது போன்ற சம்பவங்களால் ஊர்மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊருக்குள் சுற்றித்திரியும் குரங்குகள் ஊர் மக்களை துன்புறுத்துவதோடு, கடித்து காயங்களை ஏற்படுத்துவதோடு, வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. மேலும் அவ்வழியாக செல்லும் பயணிகள், பள்ளிக்குழந்தைகள் அச்சத்துடனையே கடந்து செல்கின்றனர். இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுமாறு குளத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News