செய்திகள்
கண்டதேவியில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு முதியவர் தற்கொலை
கிராம நிர்வாக அலுவலக வாசலில் முதியவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி கிராமம். இங்கு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.
இதனை இன்று தலையாரி பெரியண்ணன் திறக்க வந்தார். அப்போது அலுவலக வாசலில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது அருகே பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்தது எனவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் பிணமாக கிடந்தவர் மாற்றுத்திறனாளி ஆவார். அவர் உதவித்தொகை எதுவும் கேட்டு மனு கொடுக்க வந்தவரா? அல்லது வேறு காரணத்தால் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து ஆறாவயல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.