மயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி கலாவதி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகின்றன. 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கலாவதி 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் சோழம்பேட்டை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கலாவதி மீது ராமருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ந் தேதி கலாவதிக்கும், ராமருக்கும் குடும்ப பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த கலாவதி வீட்டில் இருந்த மண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த கலாவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கலாவதி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கலாவதிக்கு திருமணமாகி 3½ ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் விசாரணைக்காக போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.