செய்திகள்

சிதம்பரத்தில் அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை: மர்ம மனிதர்கள் துணிகரம்

Published On 2016-10-14 16:31 IST   |   Update On 2016-10-14 16:31:00 IST
சிதம்பரத்தில் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் வேங்கான் தெருவை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 70). பொதுப்பணித்துறையில் உதவியாளராக வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் வேங்கான் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

ராஜலட்சுமி தஞ்சாவூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். ராமானுஜம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு அவர் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை விழித்தெழுந்த ராமானுஜம் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராமானுஜம் வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News