செய்திகள்

தாளவாடி அருகே தங்கும் விடுதியில் மெகா சூதாட்டம்: 43 பேர் கைது

Published On 2016-10-13 16:13 IST   |   Update On 2016-10-13 16:13:00 IST
ஆசனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 43 பேர் கைது செய்யப்பட்டதும் ரூ.3லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடுபவர்களை பிடித்து போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இதேபோல தாளவாடி பகுதியில் லட்சக்கணக்கில் பணம் வைத்து பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையொட்டி ஆசனூர் போலீசார் தாளவாடி அடுத்த தொட்டபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஏராளமான பேர் பல பிரிவுகளாக உட்கார்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர். இவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடமுயன்றனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து தடுத்து கைதுசெய்தனர். மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சூதாட்டக்காரர்கள் பயன்படுத்திய கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்பட 8 வாகனங்களையும் போலீசார் கைப்பற்றினர். வாகனங்கள் யாவும் ஆசனூர் போலீஸ் நிலையம் முன் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் பல மாதங்களாக பணம் வைத்து சூதாட்டம் நடந்து வருவதாகவும், ஆனால் இதுவரை அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரியாமல் இருந்தது எப்படி என்பது பற்றியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரித்து வருகிறார்.

ஆசனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 43 பேர் கைது செய்யப்பட்டதும் ரூ.3லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News