செய்திகள்

ஈரோட்டில் பட்டதாரி வாலிபர் கார் மோதி பலி: போலீஸ் விசாரணை

Published On 2016-10-11 15:56 IST   |   Update On 2016-10-11 15:56:00 IST
ஈரோட்டில் கார் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை, மடத்துகுளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரது மகன் கார்த்திகேயன்(வயது25).

கார்த்திகேயன் ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையத்தில் தங்கி பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ.ஆங்கிலம் இலக்கணம் படித்து வந்தார். மேலும் பகுதி நேரமாக ஈரோட்டில் உள்ள ஒரு புத்தக கடையில் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து கொண்டு கார்த்திகேயன் முத்தம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று கார்த்திகேயன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News