செய்திகள்

பள்ளத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

Published On 2016-09-29 12:08 GMT   |   Update On 2016-09-29 12:08 GMT
முகவரி கேட்பதுபோல நடித்து, பெண்ணிடம் கத்திமுனையில் 9 பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் உதயன் நகரைச் சேர்ந்தவர் விக்டர். இவரது மனைவி விஷாலி (வயது30).

இவர், தனது குழந்தையுடன் கடைக்கு சென்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், வீதியில் நடந்து சென்ற போது, 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், விஷாலியை நிறுத்தி ஒரு முகவரியை காண்பித்து கேட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்த முகவரி பேப்பரை வாங்கி, விஷாலி பார்த்தார். அப்போது அந்த 2 பேரும் திடீரென கத்தியை எடுத்து அவரை மிரட்டினர்.

இதனை கண்டு விஷாலி அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என தெரியாமல் அவர் விழித்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் 2 பேரும், விஷாலியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து பள்ளத்தூர் போலீசில், விஷாலி புகார் செய்தார். அதில் கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் என குறிப்பிட்டு உள்ளார்.

இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News