செய்திகள்

புதுக்கோட்டை அருகே விஷ மீன் கடித்ததால் நடுக்கடலில் மயங்கிய மீனவர்

Published On 2016-09-18 20:47 IST   |   Update On 2016-09-18 20:47:00 IST
விஷ மீன் கடித்ததால் நடுக்கடலில் மயங்கிய மீனவரை கடலோர காவல்படையினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடியில் இருந்து நாட்டுப்படகில்  நாகூர்கனி (வயது 42) காளியப்பன், ஆறுமுகம் ஆகியோர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் சுமார் 3நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் விரிக்கப்பட்டிருந்த  வலையை இழுத்த போது வலைக்குள் அகப்பட்டிருந்த  விஷத்தன்மை கொண்ட ஜெல்லி  மீன் நாகூர்கனியை  கடித்துள்ளது. இதனால் அவருக்கு உடல் எங்கும் தடிப்பு ஏற்பட்டதுடன், மயக்கமடைந்து  படகில் விழுந்துள்ளார்.

இதையடுத்து படகில் இருந்த காளியப்பன்,  மீனவர்களுக்கான  உதவி எண் 1093 எண் மூலம்  கடலோரக்காவல் படைக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையிலான  திருப்புன வாசல் கடலோரக்காவல் படையினர், நாகூர்கனியை  மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கடற்கரையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த  ஆம்புலன்ஸ் மூலம்  மணமேல்குடி அரசு மருத்துவமனையில்  நாகூர் கனி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Similar News