செய்திகள்

சிவகங்கையில் காதல் விவகாரத்தில் 6 பேர் மீது தாக்குதல்

Published On 2016-09-15 16:17 IST   |   Update On 2016-09-15 16:17:00 IST
சிவகங்கையில் காதல் விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் தாக்கப்பட்டனர்.
சிவகங்கை:

சிவகங்கை நகர் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது19), கல்லூரி மாணவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பவானி என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பவானிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்தன.

இதனை தொடர்ந்து நேற்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதனை கேள்விப்பட்ட சரத்குமார், தனது நண்பர்கள் அழகு, சந்திரசேகர், அண்ணாத்துரை, அர்ஜூனன் மற்றும் 2 பேருடன் பவானி வீட்டிற்கு சென்று அவரது தந்தை முருகனிடம் பேசினார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், அவரது மனைவி ராணி, உறவினர்கள் சரவணன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து கம்பு மற்றும் கட்டைகளால் தாக்கியதாக சிவகங்கை நகர் போலீசில் சரத்குமார் புகார் செய்தார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த சரத்குமார் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் சரத்குமார் தரப்பு தாக்கியதில் காயம் அடைந்ததாக முருகனின் உறவினரான நாகஜோதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகன் விசாரணை நடத்தி, இருதரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் முருகன், சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Similar News