மொடக்குறிச்சி அருகே வேன் டிரைவர் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ஈரோடு:
குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுவலவு என்ற இடத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 23).
இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலத்து பாளையத்தில் 3 மாதமாக தங்கி வேன் டிரைவர் வேலை பார்த்து வந்தார்.
குளூர் ரோட்டில் தான் தங்கி இருந்த மாடி வீட்டில் சுரேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
மொடக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.
மேலும் அரசு ஆஸ்பத்திரி முன் கூடி சாலை மறியல் நடத்தவும் முயன்றனர். அப்போது போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘‘போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று போலீசார் தெரிவித்தனர். இதையொட்டி மறியலை கைவிட்டு உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர். இதனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.