செய்திகள்

நாகை அருகே காரில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது

Published On 2016-08-06 15:06 IST   |   Update On 2016-08-06 15:06:00 IST
நாகை அருகே காரில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்:

புதுச்சேரி மாநிலத்திலிருந்து கும்பகோணத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் திட்டச்சேரி பகுதி ப.கொந்தகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், சப்-இன்ஸ்பெக்டர் இனியவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 2 கார்களை விரட்டி சென்று பிடித்தனர். அதில் ஒரு காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் மற்றொரு காரில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகை மாவட்டம் மங்கநல்லூர் தத்தன்குடி பொறையார் ரோட்டை சேர்ந்த பாபு (வயது 27) என்பதும், மற்றொரு காரில் வந்தது சிவகாசியை சேர்ந்த வெங்கடேசன், குத்தாலத்தை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் புதுச்சேரியில் இருந்து கும்பகோணத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். பின்னர் 2 கார்களில் இருந்த 2,580 மதுபாட்டில்களையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வெங்கடேசன், கார்த்திக் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News