செய்திகள்

சீர்காழி அருகே தி.மு.க. பெண் நிர்வாகி உள்பட4 பேர் மீது தாக்குதல்

Published On 2016-07-31 17:07 IST   |   Update On 2016-07-31 17:07:00 IST
சீர்காழி அருகே தி.மு.க. பெண் நிர்வாகி உள்பட4 பேர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42) சாலை பணியாளர். இவரது மனைவி மகேஸ்வரி (39). இவர் கொள்ளிடம் ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது அம்மன் மாரிமுத்து வசிக்கும் தெருவிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாரிமுத்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த தேவரோடை பகுதியை சேர்ந்த 6 பேருக்கும் மேற்பட்ட கும்பல் மாரிமுத்து, அவரது மனைவி மகேஸ்வரி, தாய் காசியம்மாள், சகோதரி ஜோதி ஆகிய 4 பேரையும் தாக்கி உள்ளது. இதில் காயமடைந்த மாரிமுத்து சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகவும், இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் சீர்காழி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தீ குளிப்பேன் என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News