செய்திகள்

மதம் மாறுவதாக அறிவித்த தலித் மக்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2016-07-29 10:43 IST   |   Update On 2016-07-29 10:43:00 IST
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மதம் மாறுவதாக அறிவித்த தலித் மக்களிடம் ஆர்.டி.ஓ. சந்தித்து பேசினார்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கள்ளிமேட்டில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆடித் திருவிழாவில் தங்களுக்கு ஒருநாள் மண்டகப்படி உரிமை வழங்கப்படாவிட்டால் வேறு மதத்திற்கு மாறப்போவதாக இப்பகுதி தலித் மக்கள் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இக்கிராமத்தில் முகாமிட்டு தலித் மக்கள் மற்றும் கோவில் விழாக்குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் கள்ளிமேட்டுக்குச் சென்று இருதரப்பு மக்களையும் சந்தித்து பேசினார்.

தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமை அளிப்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று விழாக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

தங்களுக்கு வழிபாட்டு உரிமை வேண்டும் என்பதுதான் தங்கள் முக்கிய நோக்கமே தவிர மதம் மாறுவதல்ல என்று ரவிக்குமாரிடம் கூறிய, தலித் மக்கள் இவ்விவாகரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கவே அப்படி கூறினோம். நிச்சயம் இந்து மதத்தை விட்டு மாறமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நாகை கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.)ஜெயராஜ் கள்ளிமேட்டில் இருதரப்பினரையும் சந்தித்து பேசினார். அறநிலையத்துறையினருடன் கலந்துபேசி சில நாட்களுக்குள் சுமூக முடிவு எட்டப்படும். அதுவரை இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Similar News