செய்திகள்

கவுந்தப்பாடி அருகே டிப்பர் லாரி மோதி கட்டிட மேஸ்திரி உடல் நசுங்கி பலி

Published On 2016-07-26 16:23 IST   |   Update On 2016-07-26 16:22:00 IST
கவுந்தப்பாடியில் இன்று காலை டிப்பர் லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையம் போஸ்ட் ஆபிஸ் அருகே வசிப்பவர் முருகன் இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் ரஞ்சித் (வயது 22) கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார்.

ரஞ்சித் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் டீ குடிப்பதற்காக கோபி ரோட்டில் உள்ள ஒரு டீ கடைக்கு வந்தார்.

பிறகு டீ குடித்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். கவுந்தப்பாடி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அருகே காலை 7.50மணிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே மணல் அள்ளிக் கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கவுந்தப்பாடி போலீசார் விரைந்து வந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். ரோட்டில் பிணமாக கிடந்த ரஞ்சித் உடலை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது. இந்த விபத்து கவுந்தப்பாடியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News