செய்திகள்

அம்மா உணவகத்தில் புகுந்து போதை ஆசாமி திடீர் ரகளை: கண்ணாடியை அடித்து நொறுக்கினார்

Published On 2016-07-25 18:03 IST   |   Update On 2016-07-25 18:03:00 IST
அம்மா உணவகத்தில் புகுந்த போதை ஆசாமி திடீரென ரகளையில் ஈடுபட்டு கண்ணாடியை அடித்து நொறுக்கினார் இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரபை ஏற்படுத்தியது.

ஈரோடு:

ஈரோடு பவானி ரோடு வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோவில் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர் என பலர் இட்லி வாங்கி சாப்பிட்டனர். பரபரப்பாக இருந்த அம்மா உணவகத்துக்கு காலை 9 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குடிபோதையில் வந்தார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் குடிபோதையில் வந்தவர் அம்மா உணவகத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.

பிறகு அங்குள்ள டேபிள் சேர் மற்றும் பொருட்களையும் துவம்சம் செய்தார். அப்போது அங்கு சாப்பிட வந்தவர்களை அவர் நொறுங்கி கண்ணாடியை எடுத்து மிரட்டி கொண்டே குத்த வந்தார். இதனால் அவர்கள் அலறி அடித்து ஓடினர். அம்மா உணவக ஊழியர்களையும் கண்ணாடியை கொண்டு குத்த வந்தார். செய்வதறியாமல் திகைத்த ஊழியர்கள் முன் பக்க கதவை மூடி விட்டு அலறி அடித்து பின் பக்க வாசல் வழியாக தப்பி ஓடினர்.

கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் அதன் தூள்கள் சிதறி கிடந்தன. இதில் குடிபோதையில் இருந்தவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. மேலும் அவர் அங்குள்ளவர்களை மிரட்டி கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த ஆசாமியை போலீசார் விரைந்து வந்து பிடித்து ஈரோடு அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விசாரணையில் அவரது பெயர் மூர்த்தி என்று தெரிய வந்தது. மேலும் அவரை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News